×

குற்றாலம், உவரி கோயிலில் தெப்ப உற்சவம்

தென்காசி, பிப். 11:  குற்றாலம், உவரி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர். குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான திருவிழா நேற்றிரவு நடந்தது. திருவிழாவிற்காக குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை மேளதாளங்கள் முழங்க நேற்று மாலையில் சித்திர சபைக்கு அழைத்துவரப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்கார, தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிவபூதகண வாத்தியங்கள் முழங்க சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சிக்குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை  11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது. பூஜைகளை கணேசன் பட்டர், பிச்சுமணி என்ற கண்ணன் பட்டர், ஜெயமணி சுந்தரம் பட்டர், மகேஷ் பட்டர் ஆகியோர் நடத்தினர். விழாவில் கோயில் உதவி ஆணையர் விஜயலட்சுமி, அகஸ்தியர் சன்மார்க்க சபை முத்துக்குமார சுவாமி, திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் யுஎஸ்டி சீனிவாசன், ஒன்றிய செயலாளர் ராமையா என்ற துரை, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் தங்கம் பலவேசம், உறுப்பினர் வீரபாண்டியன்,  பாஜ நகர தலைவர் திருமுருகன், செந்தூர் பாண்டியன், பிலவேந்திரன் மற்றும் கட்டளைதாரர்கள்  உட்பட நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரஞ்சோதி, தக்கார் சங்கர், உதவி ஆணையர் விஜயலட்சுமி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள், கட்டளைதாரர்கள் செய்திருந்தனர். திசையன்விளை: உவரி சுயம்புலிங்க சுவாமி கோயிலில் தைப்பூச திருவிழா, கடந்த ஜன.31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தன. 10ம் திருவிழா அன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உதயமார்த்தாண்ட பூஜை, பஞ்சமூர்த்தி வீதியுலா, பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம், உச்சிகால பூஜை, இரவு சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை நடந்தது.தொடர்ந்து கோயிலில் இருந்து சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை தெப்பத்திற்கு எழுந்தருளினர். அங்கு தெப்ப உற்சவமும், சேர்க்கை தீபாராதனையும் நடந்தது. கோயில் கலையரங்கில் அம்பை மணிமுருகனின் சமய சொற்பொழிவு, தேவார இன்னிசை கச்சேரி, திசையன்விளை பவானி ரமேஷ் குழுவினரின் பரத நாட்டியம் நடந்தது. காலை முதல் சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.விழா ஏற்பாடுகளை கோயில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார். பாதுகாப்பு பணிகளில் வள்ளியூர் டிஎஸ்பி (பொறுப்பு) ராஜ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் ஈடுபட்டனர்.

Tags : Courtallam ,Uvari Temple ,festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!