×

பாடாலூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 7 லாரிகள் பறிமுதல்

பாடாலூர், பிப் 11:  திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அனுமதியின்றி திருட்டுத்தனமாக மணல் கடத்திச் செல்லப்படுவதாக பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில்
ஆலத்தூர் தாலுகா விஜயகோபலபுரம் அருகே புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன், பாடாலூர் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் காவலர்கள் ஆனந்தன் திலீப் ராஜா ஆகியோர்
திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த லாரிகளை சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. அந்த லாரிகளை சோதனை செய்தபோது லாரியில் இருந்த டிரைவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

அந்த 7 லாரிகளிலும் தலா சுமார் 8 யூனிட் மணல் இருந்தது தெரியவந்தது. அதில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் திக்குறிச்சி அருகே உள்ள மாவிலகம் கிராமத்தைச் சேர்ந்த லூகாஸ் மகன் பிஜி (31) என்பவர் மட்டும் பிடிபட்டார். இதனை யடுத்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் குமரி அனந்தன் கொடுத்த புகாரின்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் அசோக்குமார் 7 லாரிகளையும் பறிமுதல் செய்தார். மேலும், அந்த 7 லாரிகளின் உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : sand theft ,Patalur ,
× RELATED பாடாலூரில் மாணவர்களுக்கான கலைத்திருவிழா