×

சி.தாராபுரம் பகுதி வேகத்தடைகளில் வெள்ளை கோடுகள் வரையும் பணி

க.பரமத்தி பிப். 11: தினகரன் செய்தி எதிரொலியால் சின்னதாராபுரம் பகுதியில் மூன்று வெவ்வேறு இடங்களில் உள்ள வேகத்தடைக்கு வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதனால் செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர். க.பரமத்தி ஒன்றியம் சின்னதாராபுரம் கடைவீதி மற்றும் தென்னிலை செல்லும் நெடுஞ்சாலை முக்கிய பகுதியாக உள்ளது. இந்த சாலை வழியே சின்னதாராபுரம், மூலனூர், தாராபுரம், பழனி, பொள்ளாச்சி போன்ற ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று திரும்புகின்றன. இதனால் மக்களின் கோரிக்கை ஏற்று கடந்த நாள்களில் புதியதாக வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதே போல சூடாமணி ஊராட்சி ஊத்துப்பட்டி பகுதியிலும் புதியதாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட இந்த மூன்று வேகத்தடைகளுக்கு வெள்ளைக் கோடுகள் அடிக்கப்படவில்லை. மேலும் முன் அறிவிப்பு பலகையும் இல்லாததால் கருப்புக் கலரில் உள்ள தார்ச் சாலை வழியே வேகமாக வரும் நான்கு சக்கர, இரு சக்கர வாகன ஓட்டுனர்களில் பலர் வேகத்தடை மேடு இருப்பதை அறியாமல், வாகன வேகத்தை குறைக்காமல் இயக்குவதால் தினமும் ஒருவராவது தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்லும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் புதிதாக அமைத்த வேகத்தடைக்கு வெள்ளைக் கோடு அடிக்காமல் அலட்சியமாகவே இருந்து வருவது ஏன் என தெரியவில்லை என நான்கு மற்றும் இரு சக்கர வாகன ஓட்டுனர்கள் கவலை தெரிவிப்பதாக கடந்த 6ம் தேதி தினகரனில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடைகளில் வெள்ளைக் கோடுகள் வரையப்பட்டுள்ளன. இதையொட்டி செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags : C. Darapuram ,
× RELATED வங்கியாளர்கள் கண்காணிக்க வேண்டும்...