தேனி, பிப். 7: தேனி மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை வழங்கும் பணிகள் படு மந்தமாக நடப்பதால், இந்த பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். தவறு செய்த மருத்துவ அலுவலர்கள், சுகாதார செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தில் முத்துலட்சுமி ரெட்டி கர்ப்பிணி நிதி உதவித்திட்டத்தில் ஒவ்வொரு கர்ப்பிணிகளுக்கும் 18 ஆயிர்ம ரூபாய் வரை பல்வேறு வகைகளில் உதவித்தொகைகளை அரசு வழங்கி வருகிறது. தேனிமாவட்ட ஆரம்ப, துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் செவிலியர்கள் இந்த பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. இதனால் பல ஆண்டுகளாக உதவித்தொகை பெறாத கர்ப்பிணிகளும் உள்ளனர். தவிர கர்ப்பிணிகளுக்கு அரசு வழங்கும் எந்த திட்டங்களும் முறையாக சென்று சேரவில்லை.
இதுகுறித்து ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை நடக்கும் ஆய்வுக்கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளரே கண்டறித்து எச்சரித்தார். இதனை தொடர்ந்து அரசு உத்தரவுப்படி சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை நிலையங்களில் கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து வருகிறார். இதில் கர்ப்பிணிகளுக்கு உதவித்தொகை முறையாக சென்று சேராததது கண்டறிப்பட்டது. இதனால் டென்ஷனான கலெக்டர், முறையாக செயல்படாத சுகாதார செவிலியர்கள், மருத்துவ அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளார். சுகாதாரத்துறையில் உள்ள திட்டங்கள் அனைத்தையும் முறையாக பயனாளிகளுக்கு கொண்டு போய் சேர்க்க வேண்டும். இதில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கலெக்டர் பல்லவி பல்தேவ் கெடு விதித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறைகளில் பெண்டிங் கிடந்த பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது என தேனி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.