மதுரை, பிப். 7: மதுரை பெத்தானியபுரத்தில் சாலை தடுப்பை அகற்ற கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை பெத்தானியபுரம் பஸ்ஸ்டாப் எதிரே, திண்டுக்கல் ரோட்டில் மையத்தடுப்பு சுவர் கட்டப்பட்டது. இப்பகுதியில் பள்ளிகள், பிரசவம்- பொது மருத்துமவனைகள் அதிகளவில் உள்ளன. இந்த சாலை தடுப்பினால் மக்கள் வெகுதூரம் சுற்றி வந்துதான் மறுமுனைக்கு செல்ல முடியும். எனவே இந்த சாலை தடுப்பை அகற்ற கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர். ஆனால் அகற்றவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சாலை தடுப்பை அகற்ற கோரி திடீர் மறியலில் ஈடுபட்டனர்.திமுகவை சேர்ந்த நாகஜோதி, சிவா, ஆசை, நாகராஜ், ஏட்டு ராஜா, முரளி, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மைக்கேல், ராஜா, பாபு, கணேசன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த போலீசார், சாலை பணி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து கட்டப்பட்ட சாலை தடுப்பின் ஒரு பகுதியை அகற்றினர். அதன்பிறகே மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலால் திண்டுக்கல் சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இங்குள்ள சிக்னலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் இப்பகுதி மக்கள் போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.