×

சீட்பெல்ட், ஹெல்மெட் அணிந்து சென்றவர்களுக்கு இனிப்பு வழங்கி போலீசார் அசத்தல்

மஞ்சூர், பிப்.7: ஹெல்மெட், சீட்பெல்ட் அணிந்து சென்ற வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி மஞ்சூர் போலீசார் பாராட்டு தெரிவித்தார்கள்.  மஞ்சூர் காவல் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறன்றனர். இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.  இது ஒருபுறம் இருக்க இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் செல்பவர்களிடம் போலீசார் அதிரடி அபராதம் விதித்து வருகின்றனர்.மஞ்சூர் பஜார், மின்வாரிய பிரிவு, கரியமலை பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் நின்று அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் மஞ்சூர் எஸ்.ஐ. ராஜ்குமார் நேற்று காலை போலீசாருடன் மஞ்சூர் பஜார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சென்ற வாகன ஓட்டுனர்களை நிறுத்தி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார். அதே சமயம் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி உடனடி அபராதம் விதிக்கப்பட்டது. ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிந்து போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கும் வாகன ஓட்டுனர்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்துவதன் மூலம் மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் என எஸ்.ஐ. ராஜ்குமார் தெரிவித்தார்.

Tags :
× RELATED மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு