சாத்தான்குளம்,பிப்.7: சாத்தான்குளம் அருகே உள்ள சாலைபுதூர் ஏகரட்சகர் சபை மேல்நிலைப்பள்ளியில் இளையோருக்கான உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் முகாம் மற்றும் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பியாக பொறுப்பேற்க உள்ள பள்ளியின் பழைய மாணவி துர்காதேவிக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜ் தலைமை வகித்தார். ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி முன்னாள் தாளாளர் ஜோசப் தேவயிரக்கம், கிராம நிர்வாக அலுவலர் விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெங்கடேஸ்வரபுரம் பஞ். தலைவர் பெரியசாமி தர் வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இணை இயக்குநர் தனபதி கலந்து கொண்டு, துர்காதேவியை பாராட்டி நினைவு பரிசு வழங்கி பேசினார். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் அமல்ராஜ், ஆழ்வார்திருநகரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாக்கியலீலா, கருப்பசாமி, ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தானியேல் ஆகியோர் உயர்கல்வியில் வேலைவாய்ப்பு குறித்து கருத்துரை ஆற்றினர். விழாவில் பஞ். தலைவர்கள் கருங்கடல் நல்லதம்பி, கருவேலம்பாடு கீதா கணேசன், மீரான்குளம் சிவபெருமாள், குறிப்பன்குளம் சிவந்திக்கனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேய்க்குளம் வியாபாரிகள் சங்க தலைவர் ஸ்டாலின் நன்றி கூறினார்.