பொன்னமராவதி, பிப். 7: பொன்னமராவதி வட்டாரத்தில் 2017-18 ம் ஆண்டில் துவங்கப்பட்ட மதியாணி உழவர் ஆர்வலர் குழு மற்றும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களின் செயல்பாட்டினை வேளாண்மை உதவி இயக்குனர் எட்வர்ட்சிங் பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் பொன்னமராவதி வட்டாரத்தில் மதியாணி கிராமத்தில் செயல்பட்டு வரும் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட வேளாண் கருவிகளை ஒரு வருட காலத்திற்கு வாடகைக்கு விட்டும், வாடகைக்கு விடப்பட்ட தொகையினை குழுவின் வங்கி கணக்கில் செலுத்தி, அந்த தொகையினை சந்தா தொகையுடன் சேர்த்து உறுப்பினர்களுக்கு கடனாக பிரித்து அளித்து வருகின்றனர்.
மேலும் குழுவினர் மாதம்தோறும் தவறாமல் கூட்டம் நடத்தி சந்தா தொகையினை வங்கியில் செலுத்துவதுடன் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றி குழுக்களின் உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விதைகள் மற்றும் உரங்கள் குழுக்களின் மூலம் மொத்தமாக வாங்கப்பட்டு, உறுப்பினர்கள் பிரித்தெடுத்து கொள்கிறார்கள்.மதியாணி உள்ளடங்கிய கண்டெடுத்தான்பட்டி உழவர் ஆர்வலர் குழுவில் உறுப்பினர்கள் சந்தா தொகையாக சுமார் ரூ.இரண்டு லட்சம் சேமிக்கப்பட்டு, அதை உறுப்பினர்களுக்கு கடனாக பிரித்தளிக்கப்பட்டு லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. இக்குழுவின் செயல்பாட்டினை வேளாண்மை உதவி இயக்குனர் பாராட்டு தெரிவித்தார்.மேலும் சம்பா நடவின்போது திருந்திய நெல் சாகுபடி செய்திடவும், வரப்பில் உளுந்து விதை ஊன்றவும், நடவு செய்த பயிர்களுக்கு காப்பீடு செய்யவும் கேட்டு கொண்டுள்ளார்.