×

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைப்பதில் அலட்சியம் உடைந்து வீணாகும் பொருட்கள்: விபத்தில் சிக்கும் பயணிகள்

திருவள்ளூர், பிப். 6: திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான சுரங்கப்பாதை அமைக்க, சிமென்ட் கர்டர்கள் தயார் நிலையில் இருந்தும், ஓராண்டாக பணிகள் துவங்காததால் பயணிகள் அவதியில் உள்ளனர்.
சென்னை - திருவள்ளூர் - திருத்தணி மற்றும் வேலூர், காட்பாடி வழியாக திருப்பதி, ரேணிகுண்டா, புத்தூர், மும்பை, பெங்களூரு, புதுதில்லி விரைவு ரயில்களும், புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்கள் என மொத்தம் 210க்கும் மேற்பட்ட நடைகள் இவ்வழியே சென்று திரும்புகின்றன. இதில், புறநகர் ரயில்கள் மட்டும் 170 நடைகள் சென்று திரும்புகின்றன. இந்த ரயில்களில் நாள்தோறும் திருவள்ளூர் பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், மாணவ, மாணவியர் என ஒரு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு ஆண்டுதோறும் ரூ.15 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. இப்பாதையில் அதிகாலை 5 மணி முதல் 10 மணி வரையிலும், அதேபோல், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் சென்னையில் இருந்து வருவோரும், திருத்தணி, வேலூர், காட்பாடியில் இருந்து வருவோரும் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர். அப்போது, 6 நடைமேடைகள் உள்ள திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருபுறமும் தண்டவாளத்தை அடிக்கடி கடந்துதான் பெண்களும், குழந்தைகளும் செல்ல வேண்டியுள்ளது. இதனால், பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மேலும், பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மயானத்திற்குச் செல்லவும் இந்த ரயில் நிலைய இருப்புப் பாதையைக் கடந்துதான் மணவாளநகர் ஆற்றங்கரையோரம் செல்ல வேண்டியுள்ளது. அப்போது பொதுமக்கள் அதிகம் பேர் செல்வதால் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரயில்கள் வந்து விடுவதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதுபோன்று கடக்கும்போது எதிர்பாராத விதமாக பயணிகள் விபத்துகளில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படுகிறது. இதையடுத்து, ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதை தொடர்ந்து, கடந்த 2016ம் ஆண்டு சுரங்கப் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே நிர்வாகம் ஒப்புதல் அளித்தது.

தொடர்ந்து, கருத்துரு தயாரிக்கப்பட்டு, சுரங்கப்பாதை அமைக்க, ரயில் நிலையம் அருகே பெரியகுப்பம் பகுதியில், கர்டர்கள் அமைக்கும் பணிகள் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் விறுவிறுவென நடைபெற்று வந்தது. தொடர்ந்து, சுரங்கப்பாதை எடுத்து, கர்டர்கள் இணைக்கும் பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்படவில்லை.  எனவே, சுரங்கப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க ரயில்வே உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : subway ,railway station ,Thiruvallur ,
× RELATED ரயில் இருப்பு பாதை வழித்தடம்...