×

நிலுவை வழக்குகளை சமரசமாக முடிக்க வாய்ப்பு திருச்சி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

திருச்சி, பிப்.6: திருச்சி மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக முடிப்பதற்கு வாய்ப்பாக 8ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் ஆணையின்ப்படி திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வரும் வழக்குகளுக்கு சமரசம் செய்து முடித்துக்கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் (National Lok adalat) வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள் வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகள்(சமாதானமாக போகக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக செல்ல ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தின் முன்பாக, வழக்குகளில் சமரசமாக செல்வதால், தரப்பினர் நீதிமன்ற கட்டணமாக செலுத்தியுள்ள முழுத்தொகையையும் திருப்பி பெற்றுக்கொள்ளலாம், சமரசமான அன்றைய தினமே தீர்ப்பு நகல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம், தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது, தரப்பினருக்கு வெற்றி-தோல்வி என்ற மனப்பான்மை ஏற்படாது. எனவே பொதுமக்கள்-வழக்காடிகள் வரும் 8ம் தேதியன்று நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தில் தங்கள் வழக்குகளை சமரசம் செய்வதற்கான அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, பயனடையலாம். இது சம்பந்தமாக தினந்தோறும் சமரசப் பேச்சுவார்த்தை திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (ஏ.டி.ஆர் வளாகம்) அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, திருச்சி அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2460125 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம் என திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான நந்தினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Tags : National Peoples Tribunal ,Trichy District ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...