நெல்லை, பிப்.6: நெல்லையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் வழியிலுள்ள தேவர்குளத்தில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. இங்கு சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் சுப்பையாபுரம், அய்யனாரூத்து, மூவிருந்தாளி, வடக்கு அச்சம்பட்டி, தேவர்குளம், வன்னிக்கோனேந்தல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பிளஸ் 1 மாணவர்கள் 9 பேர் நேற்று காலை திடீரென மாயமாகினர். இதுகுறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் தேவர்குளம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து மாணவர்களது பெற்றோரும் பள்ளிக்கு திரண்டு வந்தனர். போலீசார் மற்றும் பெற்றோர், மாயமான மாணவர்களை தேடிய நிலையில் ஊருக்கு வெளியே ஓரிடத்தில் மாணவர்கள் 9 பேரும் ஒன்றுகூடி நின்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள், பள்ளி காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து வெளியேறியது தெரியவந்தது. இதையடுத்து பள்ளி, மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போலீசார், மாணவர்களை எச்சரித்து அனுப்பினர்.