×

மார்த்தாண்டம் அருகே நிதி நிறுவனத்தில் போலி நகையை அடகு வைத்து பணம் மோசடி

மார்த்தாண்டம், பிப்.6 :  மார்த்தாண்டம் அருகே அடகு கடையில் போலி நகையை அடகு வைத்து பணம் மோசடி செய்த டிப்டாப் ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். குமரி மாவட்டம் மார்த்தாண்டம்  அருகே புலிப்பனம் பகுதியை சேர்ந்தவர் ஜாண் பென்னட்(48).  சுவாமியார்மடத்தில் நகை அடமானம் பெறும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி  வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பைனான்சில் இவரது மனைவி ஷோபா மற்றும்  ஒரு பெண் ஊழியர் இருந்துள்ளனர். அப்போது ஆட்டோவில் டிப்-டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்து உள்ளார். அடமான  கடையில் இருந்தவர்களிடம் அந்த பகுதியை சேர்ந்த முருகன் என்று தன்னை  அறிமுகம் செய்து கொண்டார். தன்னிடம் இருந்த மூன்றரை பவுன்  காப்பு  ஒன்றை அடகு வைக்க வேண்டும் என்று கொடுத்து உள்ளார். உடனே கடையில்  இருந்தவர்கள் ஆதார் கார்டு ேவண்டும் என்று கேட்டு உள்ளனர். அதற்கு அந்த  நபரோ எனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது.
எனது வீடு அருகில்தான்  உள்ளது. எனவே நகையை அடகு வைத்து பணத்தை தாருங்கள். வீட்டிற்கு சென்று  பணத்தை கொடுத்துவிட்டு அடுத்த 10 நிமிடங்களில் ஆதார் கார்டை கொண்டு வந்து  தந்து விடுகிறேன் என்று கூறி உள்ளார். இதை நம்பிய ஷோபா மற்றும் ஊழியர்  நகையை முதற்கட்டமாக பரிசோதித்தனர்.

நகை தங்கம் என்று நம்பிய அவர்கள் அடகு வைத்து கையெழுத்து வாங்கிக்கொண்டு ₹70 ஆயிரம் கொடுத்து  உள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்டு சென்ற மர்ம நபர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஊழியர் அந்த  நபர் கொடுத்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டார். அப்போது அந்த எண்ணுக்கு அழைப்பு போகவில்லை. இதனால் ஷோபாவுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து  நகையை நன்றாக பரிசோதித்து பார்க்க தொடங்கினார். இந்த சோதனையின் போது அது  தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி  அடைந்த ஷோபா உடனடியாக தனது கணவருக்கு தகவல் கொடுத்தார். அவரும் கடைக்கு  விரைந்து வந்து பார்த்தார். இதையடுத்து  அங்கிருந்த  சிசிடிவி கேமராவை பார்த்தனர். அதில் அந்த மர்ம நபரின் உருவம் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து ஜாண் பென்னட்  மற்றும் ஷோபா ஆகியோர்  திருவட்டார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதையடுத்து  டிப்டாப் ஆசாமி மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து பலே ஆசாமியை  பிடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். போலி நகையை வைத்து ஏமாற்றி  சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : institution ,Marthandaam ,
× RELATED மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான...