ஊட்டி, பிப். 6: ஊட்டியில் இருந்து மசினகுடி, முதுமலை, கர்நாடக மாநிலத்திற்கு செல்ல இரு வழிகள் உள்ளன. ஒன்று கல்லட்டி மலைப்பாதை வழியாக செல்வது. மற்றொன்று கூடலூர் பாதை. இதில், கல்லட்டி பாதை, செங்குத்தான மலைப்பாதையில் அமைந்துள்ளது. 36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட இந்த பாதை மிகவும் குறுகலாக உள்ள போதிலும், இந்த சாலை வழியாக கர்நாடகா சென்றால் சுமார் 30 கி.மீ. தூரம் குறைகிறது. அதுமட்டுன்றி, அடர்ந்த வனப்பகுதி வழியாக இச்சலை அமைந்துள்ளதால், இதில் செல்ல சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், இந்த மலைப்பாதையில் வாகனங்களை இயக்கத் தெரியாமல் பலர் விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதனால், இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் தவிர வெளியூர் வாகனங்கள் செல்ல தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூர் வாகனங்களுக்கு, காவல்துறை மூலம் பாஸ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பாஸை காட்டினால் மட்டுமே கல்லட்டி மலைப்பாதையில் செல்ல இயலும். எனினும், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இங்கு சென்று போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். சிலர் வேறு பாதையில் சென்று கல்லட்டி மலைப்பாதையில் செல்லவும் முயற்சிக்கின்றனர். இதனால், இதனை தடுக்க தற்போது காவல்துறையினர் கல்லட்டி மலைப்பாதையில் எச்சரிக்கை பலகை வைத்துள்ளனர். அதில், நீலகிரி மாவட்டத்தில் பதிவு செய்த வாகனங்கள் மற்றும் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல பாஸ் பெற்றுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தலைகுந்தா செக்போஸ்டில் போர்டு வைத்துள்ளனர். எனினும், இதனை மீறியும் சிலர் கல்லட்டி மலைப்பாதையில் செல்ல போலீசாருடன் நாள்தோறும் வாக்குவாத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.