குளித்தலை, பிப்.4: குளித்தலை கிளை நூலகத்தில் வாசகர் வட்டம் மற்றும் 2 தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி பட்டறை தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஆங்கில பேச்சு பயிற்சி, ஓவிய பயிற்சி, தன்னம்பிக்கை பயிற்சி, கணினி அடிப்படை பயிற்சி, இந்தி எழுத்து மற்றும் பேச்சு பயிற்சி இடம் பெறுகிறது. இப்பயிற்சி குளித்தலை கிளை நூலகத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலை 3 முதல் 5.30 மணி வரை தொடர்ந்து 9 வாரங்கள் நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறுதானிய உணவுகளும், ஊக்க பரிசுகளும் வழங்கப்படுகிறது.
மேலும் இப்பயிற்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெற்றோர் அனுமதியுடன் மாணவர்கள் விண்ணப்பம் செய்து 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி தொடங்கப்பட்டது. முதல் நாள் பயிற்சியை குளித்தலை கிளை நூலகர் ஆனந்த கணேசன் தலைமை ஏற்று தொடங்கி வைத்து நூலக பயன்பாடு குறித்து பேசினார். தொண்டு நிறுவன பயிற்சியாளர்கள் ரமேஷ், சந்துரு மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளித்தனர். பயிற்சியில் கலந்து கொண்ட ஏழை எளிய மாணவர்கள் பல்வேறு பயிற்சிகளை தெரிந்துகொள்ள உதவியாக இருந்தது என்று மகிழ்ச்சியுடன் கூறினர்.