கரூர், பிப்.4: க.பரமத்தி ஒன்றியத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 7,131 பணிகள் நிறைவு பெற்றுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம் காருடையாம்பாளையம் சூரியம்பாளையத்தில் குளம் தூர் வாரியது, மழைநீர்சேகரிப்பு அமைத்தது, எம்பி நிதியில் நாடகமேடை அமைக்கும் பணிகளை கலெக்டர் அன்பழகன் ஆய்வு செய்தார். நெடுங்கூர் ஊராட்சியில் சாலைப்பணி, காருடையாம்பாளையம் சாலைப் பணிகள், தென்னிலை கிழக்கு ஊராட்சி தொப்பம்பட்டியில் தானியக் கிடங்கு, பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
பின்னர் கலெக்டர் கூறுகையில், க.பரமத்தி ஒன்றியத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 198 பேருக்கு பசுமை வீடுகள், 3344பேருக்கு தனிநபர் இல்ல கழிப்பறை, எம்எல்ஏ நிதியில் இரண்டு, எம்பி நிதியில் 16 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் 229 வீடுகள் கட்டப்பட்டு, மேலும் 300 தொகுப்பு வீடுகள் பழுது நீக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் கிராமங்களில் அடிப்படை கட்டமைப்பு வசதி, தன்றிறைவுத் திட்டத்தில் 19 பணிகள், 111தார் சாலைகள், குடிமராமத்து திட்டத்தில் 72 பணிகள், தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின் கீழ் 7131பணிகள், மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமமைத்திட்ட இயக்குனர், கவிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பழனிகுமார், உதவி பொறியாளர் சங்கர் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.