×

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் எந்த பாதிப்பும் இல்லை

தூத்துக்குடி, பிப். 4: கொரோனா வைரசால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நெல்லை,  தூத்துக்குடி மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 1ம் தேதி ஒரே நாடு, ஒரே  ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. முதல் நாளில் 41 பேரும், 2வது  நாளில் 121 பேரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகள் இல்லாமல் வெவ்வேறு  ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கி உள்ளனர். இதில் எந்த பிரச்னைகளும்  ஏற்படவில்லை. இந்த திட்டத்தை முன்னிட்டு ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கும் 5  சதவீதம் கூடுதல் ரேஷன் பொருட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசால்  தூத்துக்குடி மாவட்டத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. சீனாவிற்கு சுற்றுலா  சென்றுவிட்டு விமான நிலையத்தில் எல்லாம் பரிசோதனை முடித்து தூத்துக்குடி  மாவட்டத்திற்கு வந்த 4 பேரை மட்டும் அவர்களது வீடுகளிலேயே தீவிர கண்காணிப்பு  செய்து வருகிறோம். இவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் எதுவுமில்லை. பொதுமக்கள் தீவிர காய்ச்சல், இருமல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனையை அணுக  வேண்டும். தங்கள் இருப்பிடத்தை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்.  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டு தயார் நிலையில்  வைக்கப்பட்டு உள்ளது. துறைமுகம் வழியாக சீனாவில் இருந்து  வருபவர்களை மருத்துவக்குழுவினர் கண்காணித்து வருகின்றனர், என்றார்.

Tags : Thoothukudi ,district ,
× RELATED தூத்துக்குடி பொட்டலூரணி கிராமத்தில்...