சின்னசேலம், பிப். 4: கச்சிராயபாளையத்தில் நடந்து வரும் ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக மக்கள் புலம்புவதால் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கச்சிராயபாளையம் வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு ஏராளமான கல்வி நிறுவனங்கள், வணிக கடைகள், கோமுகி சர்க்கரை ஆலை என பல நிறுவனங்கள் உள்ளது. இதனால் கச்சிராயபாளையம் பகுதியில் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து அக்கராயபாளையம் மும்முணை சந்திப்பில் இருந்து, கச்சிராயபாளையம் பஸ்நிலையம், அம்மாபேட்டை வரை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மனு அனுப்பி வந்தனர்.
இதையடுத்து கடந்த 4 நாட்களாக கள்ளக்குறிச்சி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் நீதிதேவன் தலைமையில் கச்சிராயபாளையம் காவல் நிலையம் முன்பிருந்த வீடுகள் மற்றும் சாலையோரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுமார் 30 வீடுகள் இடித்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளின் முன்பு போடப்பட்ட மேற்கூரைகள் பிரிக்கப்பட்டது. அதாவது ஆக்கிரமிப்பு அகற்றம் காவல் நிலையம் முன்பிலிருந்து பழைய பெண்கள் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் வரை நடந்தது. அதன் பிறகு பழைய பஸ்நிலையம் வரை ஆக்கிரமிப்பு அகற்றம் முறையாக நடக்கவில்லை. ஏதோ பெயரளவில் நடத்திவிட்டு சென்றனர். காரணம் ஆக்கிரமிப்பு வீடுகளை முறையாக அளந்து குறியீடு செய்யாமல் நில அளவைத்துறையினர் குளறுபடி செய்ததால் ஆக்கிரமிப்பு சரியாக அகற்றவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆகையால் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கச்சிராயபாளையம் வந்து பார்வையிட்டு, ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.