×

மாணவர்களின் மனதில் தடம் பதிய அரசு பள்ளிகளின் சுவற்றில் திருக்குறள் எழுத வேண்டும் தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தல்

இளையான்குடி, பிப்.4:     மாணவர்களின் மனதில் பதிய பள்ளிகளின் சுவற்றில் திருக்குறள் எழுத கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். இளையான்குடி ஒன்றியத்தில் 64 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளும், 21 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும், 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளும், ஒரு அரசு தொடக்கப் பள்ளி உட்பட 89 அரசுப் பள்ளிகளும்,  25 தொடக்கப் பள்ளிகள், 8 நடுநிலைப் பள்ளிகள், 4 உயர்நிலைப் பள்ளிகள், 4 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 41 அரசு உதவிபெறும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 130 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் தமிழ்வழிக் கல்வி முறையில் படித்து வருகின்றனர். தற்போதைய சூழலில் பாடப்புத்தகத்தில் திருக்குறளை படித்து வந்தாலும், போதிய அளவு மாணவர்களுக்கு திருக்குறள் பற்றிய முழுமையான கருத்தும் தெளிவும் இல்லை.

செல்போன்களில், வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் வரும் தத்துவங்கள், கவிதைகள் பற்றி மனப்பாடமாகவும், அர்த்தத்தையும் தெளிவாக தெரிந்து வைத்துள்ள இந்தகாலத்து பள்ளி மாணவர்களுக்கு, உலகப் பொதுமறையாம் திருக்குறள் குறித்து ஆர்வமோ, அர்த்தமோ தெரியாமல் உள்ளனர் என தமிழ் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.  இன்றைய காலகட்டத்தில் பள்ளிசுவர்கள் வெறுமனேயும், வால்போஸ்டர்கள் ஒட்டும் இடமாகவும் உள்ளது. பள்ளி பருவத்திலேயே திருக்குறளை  மாணவர் மனதில்  தடம் பதிக்க கல்வி நிலையங்களான அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகியவற்றின் சுற்றுச்சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள் ஆகியவற்றில் திருக்குறளை எழுதலாம். மாணவர்களின் கண்களில்படும்படி திருக்குறள் எழுதினால் சுலபமாக மனதில் பதியும். அத்துடன் காலையும், மாலையும் பள்ளி வழிபாட்டு நேரத்தில் திருக்குறளை சேர்ந்து சொல்ல மாணவர்கள் மனதில் பதியும் எனவும், அதற்கு மாவட்ட கல்வித்துறை தேவையான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழ் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் ஆர்வலர் சேதுஜெகதீஸ் கூறுகையில், இன்றைய சூழலில் திருக்குறளை தெரிந்து வைத்திருக்கும் மாணவர்கள் சொற்பம். காரணம் புத்தகத்தில் மட்டுமே திருக்குறள் உள்ளது. பொது இடங்கள், பள்ளி சுவர்கள், வகுப்பறை கட்டிடங்கள், நிழற்குடைகள், ஆகியவற்றில் திருக்குறளை எழுதினால் மாணவர் மனதில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.  மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் அதற்குத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : state schools ,activists ,
× RELATED பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த...