×

அமராவதி ஆற்றில் மூழ்கிய வாலிபர் சடலம் மீட்பு

தாராபுரம், பிப். 4:  தாராபுரத்தை அடுத்த திருமலை பாளையத்தை  சேர்ந்த அங்கமுத்து மகன் அருண் குமார் (28). இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, திருமலை பாளையம் அருகே உள்ள ஆயில் மில் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காங்கயம் அருகே உள்ள அழகுமலையில் நடந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க போவதாக வீட்டில் சொல்லிவிட்டு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதையடுத்து ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு நேற்று முன்தினம் மதியம் ஊர் திரும்பினார். அப்போது புதிய பாலம் அருகே அமராவதி ஆற்றில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார். இதில் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற அருண்குமார் ஆற்றின் சுழலில் சிக்கி நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் தாராபுரம் போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

 இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புத்துறையினர் ஆற்றில் அருண்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு வரை சடலம் கிடைக்காததால், மீண்டும் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர் காலை 11 மணியளவில் அருண்குமார் உடலை மீட்டனர். இதையடுத்து தாராபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Rescuer ,Amravati River ,
× RELATED கரூர் அமராவதி ஆண்டாங்கோயில் தடுப்பணையில் போதிய மீன் வரத்து இல்லை