கிருஷ்ணகிரி, ஜன.31: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முன்னாள் படைவீரர்களுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் படைவீரர், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, தொழில் கடனுதவி, மின் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 16 மனுக்களை வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்ட டிஆர்ஓ, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தின் போது, 8 முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ₹1 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை டிஆர்ஓ வழங்கினார். இதில் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, நல அமைப்பு அலுவலர் ரமேஷ்குமார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.