திருப்புத்தூர், ஜன.31: திருப்புத்தூர் வீரஆஞ்சநேயர் கோயிலில் நேற்று புதிய மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்புத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள மேலக்கோட்டை வீரஆஞ்சநேயர் கோயிலில் புதிய மூலவர் சிலை பிரதிஷ்டை ஏற்பாடு செய்யப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் பகவத் பிரார்த்தனை, யஜமானர் சங்கல்பம், அங்குரார்ப்பணம், புதிய பிம்பம் கண் திறத்தல், கோபூஜை நடந்தது. பின்னர் பூர்ணாகுதி பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று காலையில் 7 மணியளவில் மூலவர் ஹோமம், யாத்ராதானம் நடைபெற்றன. தொடர்ந்து காலை 9.30 மணியளவில் கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து 11 மணியளவில் பிரதிஷ்டை, மகா தீபாராதனை நடைபெற்றன. பின்னர் ஆஞ்சநேயருக்கு வெள்ளி அங்கி அணியப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன.