காஞ்சிபுரம், ஜன.31: காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோயில் பிரமோற்சவம் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வைணவ தலங்களில் சிறப்பு பெற்று விளங்கும் காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், தை மாத பிரமோற்சவம் 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.இதையொட்டி, நேற்று காலை 7 மணிக்கு, கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்கியது. இதனை முன்னிட்டு காலை உலகளந்த பெருமாள் தேவி, பூதேவியருடன் சப்பரம் வாகனத்தில் எழுந்தருளி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதை தொடர்ந்து தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சேஷ வாகனம், சந்திரபிரபை, பல்லக்கு, யாழி வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி பெருமாள் வீதியுலா வருவார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக 3ம் நாள் நாளை (சனிக்கிழமை) கருடசேவை, 7 நாள் திருத்தேர் உற்சவமும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் குமரன் மற்றும் நிர்வாகிகள் செய்கின்றனர்.