×

ஆர்.கே.பேட்டை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி

பள்ளிப்பட்டு, ஜன. 31: ஆர்.கே.பேட்டை அருகே, மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. ஆர்.கே.பேட்டை அடுத்த வெரும்பி ஊராட்சி, மஞ்சூர் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (55). விவசாயி. இவர் தனது நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக நேற்று காலை வந்தார். அப்போது பம்புசெட்டில் மின்சாரம் வருகிறதா? என மின்பெட்டியை சோதித்தபோது மின்சாரம் பாய்ந்து முருகேசன் தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே முருகேசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.தகவலறிந்து ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், எஸ்.ஐ குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து முருகேசன் சடலத்தை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மற்றொரு சம்பவம்: ஆர்.கே.பேட்டை-திருத்தணி சாலையில், எஸ்விஜி.புரம் ஊராட்சி பகுதியில் தனியார் பள்ளி எதிரே உள்ள மரத்தில் நேற்று காலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தொங்கியது. தகவலறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாராவது அடித்து கொன்றார்களா? தற்கொலையா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : RKpet ,
× RELATED மூன்றாவது முறையாக பாஜக ஆட்சிக்கு...