ஊட்டி,ஜன.31: தோடர் பழங்குடியினர் வளர்ப்பு எருமைகளுக்கு உப்பு வழங்கும் ‘உப்பூட்டும்’ விழா ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குரும்பர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர். இவர்கள், வனங்களை ஒட்டியுள்ள பகுதிகளிலும், வனங்களிலும் வசித்து வருகின்றனர். இவர்கள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை தொடர்ந்து பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடியின மக்கள் பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். தங்களது கோயில்களுக்கு கூரை மாற்றும் பொலிவெய்த் திருவிழா, புத்தாண்டை வரவேற்கும் ெமாற்பர்த் திருவிழா மற்றும் திருமணத்திற்கான வில் அம்பு வழங்கும் விழா ஆகியவை நடத்தி வருகின்றனர். அதேபோல், அவர்களின் முக்கிய வாழ்வாதாரமான எருமைகளுக்கு உப்பு வழங்கும் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகின்றனர். இவ்விழா, ஊட்டி அருகேயுள்ள முத்தநாடு மந்தில் நடந்தது. இதற்காக, அங்குள்ள மைதானத்தில் பள்ளம் தோண்டி அதில் நீரை நிரப்பினர். பின், உப்பை கொட்டினர். ஒவ்வொருவராக தாங்கள் வளர்க்கும் எருமைகளும் மற்றும் கோயில் எருமைகளை அழைத்து வந்து அந்த உப்பு நீரை குடிக்க வைத்தனர். பின், பழங்குடியின மக்கள் அந்த நீரை புனித நீராக கருதி அனைவரும் பருகினர். தொடர்ந்து, அங்குள்ள பாரம்பரிய ேகாயிலை சுற்றிலும் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடினர்.