திருச்சி, ஜன. 30: திருச்சியில் குழந்தைகள் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட ஏசி மெக்கானிக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் குழந்தைகள் பயன்படுத்தப்பட்ட ஆபாசப்படத்தை பார்த்தவர்கள் பட்டியல் லிஸ்டில் உள்ளவர்களை கண்டறிய தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த தனிப்படை ஐ.பி முகவரியை வைத்து யார் யாரெல்லாம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ பார்த்தார்கள் என்ற லிஸ்ட்டை எடுத்தது. இதில் திருச்சி காஜாப்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்(42). டிஎம்இ படித்தவரான இவர் ஏசி மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் குழந்தைகள் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இவரை கடந்தாண்டு டிசம்பர் 12ம் தேதி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 6 பிரிவின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சிறையில் உள்ள கிறிஸ்டோபர் அல்போன்ஸ்சை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடக்கோரி கன்டோன்மென்ட் மகளிர் இன்ஸ்பெக்டர் பரிந்துரைத்தார். இதனை ஏற்ற கமிஷனர் வரதராஜூ, சிறையில் உள்ள கிறிஸ்டோபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். இதற்கான நகல் சிறையில் உள்ள கிறிஸ்டோபரிடம் போலீசார் வழங்கினர்.