×

குப்பை மலையாக காட்சியளிக்கும் பக்கிள் ஓடை தூர்வாரப்படுமா? அனைத்து தரப்பினர் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி, ஜன. 30: குப்பை மலையாக காட்சியளிக்கும் பக்கிள் ஓடையை முழுமையாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நெல்லை கலெக்டராக இருந்த இங்கிலாந்தை சேர்ந்த பக்கிள்துரை, தூத்துக்குடி நகரில் மழைக்காலத்தில் காட்டாற்று வெள்ளம் சேதம் ஏற்படுத்துவதை தடுக்க அவற்றை நேரடியாக கடலுக்குள் கொண்டு செல்ல ஒரு திட்டம் வகுத்தார். அதன்படி கோரம்பள்ளத்தில் இருந்து தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை வரை 9 கிமீ தூரத்திற்கு கால்வாய் வெட்டி அதன் வழியாக தண்ணீரை கடலுக்கு கொண்டு சென்றார். பக்கிள்துரை அமைத்த கால்வாய் என்பதால், இதனை பக்கிள் கால்வாய் என்றே பொதுமக்கள் தற்போது வரையில் அழைத்து வருகின்றனர்.

பக்கிள் கால்வாயும், தற்போது கழிவுநீர் ஓடையாக மாறியுள்ள நிலையில் வெள்ள நீர் வடிகாலாக பயன்படுமென கருதி,  கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த  மு.க.ஸ்டாலின் பக்கிள் ஓடையை ஆய்வு செய்து அதனை ரூ.35 கோடியில் சீர்படுத்த உத்தரவிட்டார். அதன்பேரில் பக்கிள் ஓடையை ஆழப்படுத்தி கான்கிரீட் தளத்துடன் அதன் இருபுறமும் சுவர் எழுப்பப்பட்டது. திரேஸ்புரத்தில் இருந்து 3ம் மைல் வரையில் இந்த பக்கிள் ஓடை சீரமைக்கப்பட்டது. கடந்த 2015ம் ஆண்டு தூத்துக்குடியில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் அடித்து செல்வது பக்கிள் ஓடை மூலம் தடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த பக்கிள் ஓடை தூர்வாரப்படாமல், குப்பை மலையாகவும், மரங்கள், செடிகள் வளர்ந்தும், நாணல்கள் நிறைந்தும் ஒரு காட்டு ஓடைபோல மாறிவிட்டது. கடந்த பருவமழைக்கு முன் நந்தகோபாலபுரம் பகுதியில் தூர்வாரும் பணி தொடங்கப்பட்டது. அங்கிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஓடையின் பாதியளவிற்கு தூர்வாரப்பட்டது. ஆனால் அதன்பின்னர் மழை வந்ததால் தூர்வாரும் பணியும் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் தற்போது கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே குட்டைகள் போல தேங்கியுள்ளது. மணல்மேடுகள், குப்பை குவியல்கள், சேறு நிறைந்து செடிகள், கொடிகள், மரங்கள் முளைத்து தண்ணீர் சீராக செல்ல முடியாமல் சிறிய ஓடையாக காணப்படுகிறது. நகரின் மத்தியில் செல்லும் இந்த ஓடை, மழை நேரங்களில் வெள்ள நீர் வடிகாலாகவும் இருப்பதால் அதன் முக்கியதுவம் கருதி போர்க்கால அடிப்படையில் இதனை சீரமைத்து, தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்