நெல்லை : நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2018-2020ம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு நெல்லை மாவட்டத்தில் விரைவில் கூட முடிவு செய்துள்ளது. இதை முன்னிட்டு நெல்லை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள தனி நபரோ, சங்கங்களோ அல்லது நிறுவனங்களோ, தீர்க்கப்பட வேண்டிய பொது பிரச்சனைகள், குறைகள் குறித்து மனுக்களை (ஐந்து நகல்கள் தமிழில் மட்டும்) மனுதாரர் / மனுதாரர்கள் தேதியுடன் கையொப்பமிட்டு தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, சென்னை - 600 009 என்ற முகவரிக்கு 2020ம் ஆண்டு பிப்.14ம் தேதிக்குள் தங்களது மனுக்களை அனுப்பலாம்.
மனுக்கள் கண்ணியமான வாக்கியத்தில் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொதுப் பிரச்சனைகள் குறித்த மனுக்களாக இருக்கலாம். மனுக்கள் ஒரேயொரு
பிரச்னையை உள்ளடக்கியதாகவும், ஒரேயொரு துறையைச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும்.
மனுக்கள் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மனுவில் உள்ள பொருள் தனிநபர் குறை, நீதிமன்றத்தின் முன் வழக்கிலுள்ள பொருள், வேலைவாய்ப்பு, முதியோர் ஓய்வூதியம், பட்டா மற்றும் அரசு வழங்கும் இலவச உதவிகள் வேண்டுதல், வங்கிக் கடன் அல்லது தொழிற்கடன் வேண்டுதல், அரசுப் பணியில் மாற்றம் வேண்டுதல், அரசு அலுவலர்களின் குறைகளை வெளிப்படுத்துதல் என இருக்கக் கூடாது.
சட்டமன்றப் பேரவை விதிகளின் வரம்பிற்கு உட்பட்ட மனுக்களை, மனுக்கள் குழு மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தாலும், குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனு மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படும். அப்போது, மனுதாரர் முன்னிலையில், குழு கூட்டத்தில் கலந்து கொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்படும். இது குறித்து, மனுதாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலிருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனியாக அனுப்பப்படும். 14.02.2020க்குப் பின்னர் பெறப்படும் மனுக்கள் குழுவின் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்படாது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.