சேலம், ஜன.30: ஆத்தூர் அருகே மஞ்சினியில் மஞ்சினி ஊராட்சி மற்றும் மதுரை தானம் களஞ்சியம் அறக்கட்டளையின் சார்பில், வளர் இளம்பெண்கள் மேம்பாடு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மஞ்சினி ஊராட்சி மன்றத் தலைவர் இசையழகன் தலைமை வகித்தார். ஓமலூர் பொறுப்பாளர் அலெக்ஸ் பாண்டியன் வரவேற்றார். பைத்தூர் தலைவர் கலைச்செல்வி சிவகுமார், வளையமாதேவி தலைவர் வரதராஜன் ஆகியோர் பேசினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பழனிவேல், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வன் ஆகியோர், பெண்களின் முன்னேற்றம் குறித்து விளக்கி பேசினர். வளர் இளம்பெண்களின் தன் சுத்தம் குறித்து சரண்யா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சங்கீதா, குழந்தைகள் மற்றும் பெண்களின் உரிமைகள்- அரசு வழங்கும் சேவைகள், கணினி செயலிகள் குறித்து கெஜலட்சுமி ஆகியோர் விளக்கி பேசினர்.
மண்டல ஒருங்கிணைப்பாளர் பழனிவேல், தானம் அறக்கட்டளை உழவர் மேம்பாடு, இயற்கை மூலிகை வேளாண்மை மற்றும் உழவர் -உற்பத்தியாளர், நிறுவனங்களில் பெண்களின் வாழ்வாதார மேம்பாடு குறித்து விளக்கம் அளித்தார். மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் லோகமாதா, பெண்கள் சுயஉதவி குழுக்குள் சாதித்தது, சாதிக்க வேண்டியது குறித்து விளக்கினார். பள்ளி தலைமையாசிரியர் கண்ணன் வாக்கத்தான் நிகழ்வை துவக்கி வைத்தார். மதுரை சின்னப்பிள்ளையின் வழிகாட்டுதல் மூலம், இயக்கத்தில் முக்கிய பங்காற்றி வரும் தானம் களஞ்சிய தலைவிகளான வீராணம் லட்சுமியம்மாள், தலைவாசல் முத்துலட்சுமி ஆகியோர் விளக்கி பேசினர். காந்திமதி நன்றி கூறினார்.