×

உளுந்தூர்பேட்டை அருகே சாலை நடுவே மெகா சைஸ் பள்ளம்

உளுந்தூர்பேட்டை, ஜன. 30: உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் இருந்து கிளியூர், எம்.குன்னத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையில் தனியார் பள்ளிக்கு அருகில்  உள்ள வளைவில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளம் சாலையின் நடுவே உள்ளதால் அந்த வழியாக இருசக்கர மற்றும் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் முக்கிய வளைவு என்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் சைக்கிளில் செல்பவர்கள் பகல் மற்றும் இரவு நேரத்தில் ஏராளமானவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த வழியாக தினந்தோறும் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகளில் செல்பவர்கள் இந்த பள்ளம் உள்ள வளைவில் திரும்பும் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.  

இதுகுறித்து இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊராட்சி அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், கிராமச்சாலைகள் பராமரிப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கோரிக்கை மனு கொடுத்தும் இதுவரையில் இந்த சாலையில் உள்ள பள்ளத்தினை சரி செய்யாமல் உள்ளதால் பொதுமக்கள், இருசக்கர மற்றும் அனைத்து வாகன ஓட்டுனர்களும் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பெரிய அளவிலான விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படும் முன் சாலையில் உள்ள இந்த பாதாள பள்ளத்தினை விரைந்து மூடி சாலை போட வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Ulundurpet ,road ,
× RELATED தேர்தல் பறக்கும் படை நடத்திய...