×

பள்ளி வேன் மோதி பெண் குழந்தை பலி

உத்திரமேரூர், ஜன. 29: பள்ளியில் இருந்து வந்த மகனை அழைக்க சென்றபோது, வேன் மோதி குழந்தை பரிதாபமாக இறந்தது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பெருநகர் புதிய காலனியை சேர்ந்தவர் அருணகிரி. இவரது 6 வயது மகன், மானாம்பதி கூட்ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கிறான். தினமும் சிறுவனை, பள்ளி வேன் மூலம் பள்ளிக்கு அழைத்து சென்று, மீண்டும் வீட்டில் கொண்டு விடுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்து சிறுவன் வேன் மூலம் வீடு திரும்பினான். அவனை அழைத்து செல்ல, அவரது தாய் காத்திருந்தார். அப்போது அவர், தனது 2 வயது ெபண் குழந்தை பொன்மதியையும் தூக்கி சென்றார். வேனில் இருந்து சிறுவன் இறங்கி கொண்டிருந்தான். அந்த நேரத்தில், அருகில் நின்றிருந்த பொன்மதி, வேனின் முன்பகுதிக்கு ஓடினாள். இதை கவனிக்காத வேன் டிரைவர் வேனை இயக்கியபோது, பொன்மதி மீது மோதியது. இதில் குழந்தைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, படுகாயமடைந்த குழந்தையை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை பொன்மதி பரிதாபமாக இறந்தாள். புகாரின்படி பெருநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன் டிரைவர் சிவகங்கரிடம் (28) விசாரிக்கின்றனர். பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே கொளத்தூர் பகுதியில் ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையை ஒட்டி  கூல்டிரிங்க்ஸ் கடை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு, அருகில் உள்ள அறையில் ஊழியர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் காலை ஊழியர்கள் கடையை திறக்க வந்தனர். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. உள்ளே சென்று பார்த்தபோது, கல்லா பெட்டியில் வைத்திருந்த ₹40 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைப்பற்றக் கூடாது என்பதற்காக, கம்ப்யூட்டரில் இருந்த ஹார்டிஸ்க் மற்றும் பென் டிரைவர் ஆகியவற்றை மர்மநபர்கள் எடுத்து சென்றுள்ளனர்.

புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மாமல்லபுரம்: நாகை மாவட்டம் மாயவரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (26), சிவகங்கை மாவட்டம் சிலையான் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இருவரும் நண்பர்கள். கல்பாக்கம் அடுத்த நரசங்குப்பம் கிராமத்தில் தங்கி, தனியார் கல்லூரியில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை இருவரும், ஒரே பைக்கில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னையில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றனர். அங்கு தரிசனம் முடிந்து வீட்டுக்கு புறப்பட்டனர். மாமல்லபுரம் மாமல்லன் சிலை அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறிய பைக், பிளாட்பாரத்தில் மோதியது. தூக்கி வீசப்பட்ட 2 பேரும், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தனர். தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலங்களை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

பெரும்புதூர்: பெரும்புதூர் அருகே படப்பை அடுத்த கரசங்கால், மல்லீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் முத்துராஜ் (61). ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் விஜயராஜ், மருமகள் திவ்யா. கடந்த 23ம் தேதி முத்துராஜ், தனது மனைவியுடன் ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்றார். 24ம் தேதி விஜயராஜ், அவரது மனைவி திவ்யா ஆகியோர் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றனர். இந்நிலையில், முத்துராஜ், மனைவியுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறவை திறந்து அதில் இருந்த 15 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. புகாின்படி மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : School van ,baby girl ,
× RELATED மூன்றாவதாக பிறந்த பெண் சிசு திடீர் சாவு