×

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதியில் தங்கி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி

காஞ்சிபுரம், ஜன.29: காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் பயிற்சி மையம் இணைந்து நடத்திய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான ஆளுமைத் திறன் பயிற்சி விழிப்புணர்வு மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதனை கலெக்டர் பொன்னையா தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது. மத்திய, மாநில அரசுகளால் பல்வேறு பணிகளுக்கு போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் கலந்து கொண்டு தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவிகள் விடாமுயற்சி எடுத்து தங்களின் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசின் சார்பில், 27 வகையான பணியிடங்களுக்கு ஒரே போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு 800 முதல் 1000 பேர் வரை தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் வங்கி பணியாளர், ரயில்வே பணியிடங்களுக்கு, தமிழக அரசு தகுதித் தேர்வு உள்பட பல்வேறு தேர்வுகளுக்கு தயார் செய்யவிருக்கும் மாணவ, மாணவிகள் இந்த திறன் பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி, தங்களது திறனை வளர்த்து முன்னேற வேண்டும் என்றார். துணை இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு நலம்) அருணகிரி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, தனி வட்டாட்சியர் அகிலாதேவி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : hostels ,Aboriginal ,
× RELATED சிட்டுக்குருவி தினம் அனுசரிப்பு