திருச்சி, ஜன. 29: திருச்சி அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மகப்பேறு, நரம்பியல், எலும்பு, தீக்காயம், விபத்து உள்ளிட்ட ஏராளமான பிரிவுகள் உள்ளது. இதில் தினமும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து சுகாதாரத்துறை மூலம் வீடியோ கான்ஸ்பிரன்சிங் நடந்தது. இதில் திருச்சி மருத்துவமனையில் டீன் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு பிரிவிலும் இருந்து புள்ளி விவரங்கள் கேட்கப்பட்டது. இதில் அந்தந்த துறை டாக்டர்கள் பதில் அளித்தனர். அப்போது மகப்பேறு துறையில் பிறப்பு, இறப்பு குறித்து புள்ளி விவரம் கேட்கப்பட்டது. அதற்கு பொறுப்பில் இருந்த டாக்டர் தெரியவில்லை என்றார்.
இதையடுத்து மெமோ வழங்கப்படும் என கூறப்பட்டது. இதனால் வெகுண்ட மகப்பேறு பெண் டாக்டர், தனக்கு வேலையே வேண்டாம் என கூறிவிட்டு கான்ஸ்பிரன்சிங்கில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு குழுமி இருந்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வெளியேறிய பெண் டாக்டரை சமாதானப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து டீன் வனிதா கூறுகையில், பெண் டாக்டருக்கு எந்த மெமோவும் வழங்கப்படவில்லை. அவர் தற்போது பணியில் உள்ளார் என்றார்.