×

விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவேல மரங்களை அகற்ற வேண்டும்

புதுக்கோட்டை, ஜன.29: காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும் கருவேல மரங்களை அகற்ற அரசு துறைகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலிக்கருவை மரங்கள் மாநிலம் முழுவதும் பரவலாக உள்ளன. எந்த வறட்சியிலும் செழித்து வளர்ந்து விடும் இவை வேலிக்கருவை, கருவேலா, என்று பல வகைகளாக உள்ளன. வேலிக்கருவை மரங்களை அழிக்க முடியாது என்றும், அவை வெட்ட வெட்ட வளர்ந்து விடுவதாகவும் கூறுகின்றனர். ஆனால், அது உண்மை அல்ல. ஒரு காலத்தில் திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் மக்களின் எரிபொருளுக்காகவும் விறகு வியாபாரம் செய்து பிழைக்கும் விதமாகவும் ஹெலிகாப்டரில் வேலிக்கருவை விதைகள் தூவப்பட்டன. பின்னர் அவை நாடெங்கும் பரவி விட்டன. ஆனால், தற்போது விறகு தேவையை அறிவியல் தொழில்நுட்பங்கள் மாற்றி விட்டன.

எனவே, வேலிக்கருவை மரங்களை வளர்த்துதான் விறகு தேவையை பூர்த்தி செய்தாக வேண்டும் என்பதில்லை. அதே நிலத்தில் மற்ற மரங்களை நட்டு வளர்க்கலாம். வேலிக்கருவை மரங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ஒரே மாதத்தில் அழித்துவிட முடியும். கேரளத்தில் விவசாய நிலங்களில் வேலிக்கருவை இல்லை. தப்பித்தவறி முளைத்தாலும் அழித்து விடுகிறார்கள். இன்றைக்கு சொட்டு நீர்ப்பாசனம் அமைத்து விவசாயம் செய்யும் நிலையில் காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் வேலிக்கருவை உறிஞ்சி விடும்போது விவசாயத்திற்கு எதிராக இருக்கும் அதை அகற்றி விடுவதுதான் நியாயம். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள குளங்கள் மற்றும ஏரிகளில் சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதேபோல் பேரூராட்சிகள், கிராம பஞ்சாயத்துகளும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவே சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுத்து கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Removal ,Pudukkottai district ,
× RELATED கறம்பக்குடி அருகே இயந்திரம் வாயிலாக கோடை நடவு பணிகள் தீவிரம்