×

வாட்ச்மேன் இல்லாத அரசு விடுதிகள் மாணவர்கள் தங்கி படிக்க அஞ்சுவதால் உடனே நியமனம் செய்ய கோரிக்கை


சிவகங்கை, ஜன. 29: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசு விடுதிகளில் போதிய பாதுகாப்பில்லாத நிலையில் மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். அனைத்து விடுதிகளிலும் வாட்ச்மேன்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை
எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதி திராவிடர் மாணவ, மாணவியர் விடுதி என 79 உள்ளன. இதில் சுமார் 50 விடுதிகள் மாணவர்கள் விடுதியாகும். இந்த விடுதிகளில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதிகளில் சமையலர் மற்றும் வார்டன்கள் உள்ளனர். வார்டன்கள் இரவு நேரங்களில் விடுதிகளில் தங்குவது கிடையாது. விடுதிகள் கண்காணிப்பற்ற நிலையிலேயே உள்ளன. இதனால் மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிப்பதற்கு அச்சமடைந்து வருகின்றனர். விடுதிகளில் தங்குவதாக கணக்கு இருந்தாலும் பெரும்பாலான நாட்கள் மாணவர்கள் ஊருக்கு சென்றுவிடுவது அல்லது வேறு இடங்களில் தங்கி வருகின்றனர். இதனால் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. இந்த மாணவர்கள் படிப்பிலும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். விடுதியில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருக்க அனைத்து விடுதிகளுக்கும் வாட்ச்மேன் நியமிக்க வேண்டும். வாட்ச்மேன் இருந்தால் மாணவர்கள் அல்லாதவர்கள் விடுதிக்குள் செல்ல முடியாது. மாணவர்களுக்கும் பாதுகாப்பான உணர்வு ஏற்படும். மாணவர்களும் கண்காணிப்பு நிலையில் இருக்க நேரிடும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது, ‘அரசு மாணவர்கள் விடுதிகள் அனைத்திலும் வாட்ச்மேன் நியமிக்க பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த விடுதிகளில் போதிய கண்காணிப்பு, பாதுகாப்பில்லாத நிலையில் மாணவர்களும் தவறான வழிக்கு செல்ல நேரிடும். படிப்பில் கவனம் செலுத்துவது குறைந்து வருகிறது. விடுதி மாணவர்கள் குறித்து அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அனைத்து விடுதிகளிலும் வாட்ச்மேன் நியமனம், அடிப்படை வசதிகள் செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Tags : hostels ,
× RELATED தமிழ்நாட்டில் மேலும் 10 பெண்கள் விடுதிகள் தோழி விடுதியாக தரம் உயர்கிறது