×

கிருஷ்ணகிரி அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, கார் திருட்டு

கிருஷ்ணகிரி, ஜன.29: கிருஷ்ணகிரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 4 பவுன் நகையை திருடிய மர்ம நபர்கள் காரையும் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி சத்யசாய் நகரை சேர்ந்தவர் ஜானகிராமன். தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி உதயபானு(48). இவர் நேற்று முன்தினம் காலை தனது வீட்டை பூட்டிவிட்டு, வெளியே  சென்றார். மீண்டும் மாலை வீடு திரும்பியபோது கேட் மற்றும் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த காரும் மாயமாகி இருந்தது.

இதனால், அவர் பதறியடித்து வீட்டினுள் சென்று பார்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 4 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உதயபானு, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்றனர். தொடர்ந்து, கைரேகை நிபுணரை வரவழைத்து, அங்கு பதிவாகியிருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Jewel ,
× RELATED வங்கியில் பணியாற்றும் நகை...