×

லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை பெற்ற ஓய்வு உதவிப்பொறியாளர் நீதிமன்றத்தில் சரண்

மதுரை, ஜன. 28:  மோட்டார் மின்இணைப்பிற்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட உதவிப்பொறியாளர் மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை மாவட்டம், நிலையூர் சம்பக்குளத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயியான இவர், தனது தோட்டத்திற்கு மின்மோட்டார் இணைப்பு கேட்டு திருநகர் மின்சாரவாரிய அலுவலகத்தில் கடந்த 2004ல் விண்ணப்பித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்ட வழக்கில் திருநகரைச் சேர்ந்த உதவிப் பொறியாளர் விஜயகுமார் (ஓய்வு பெற்றவர்) மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் விஜயகுமாருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து விஜயகுமார் ஐகோர்ட் கிளையில் அப்பீல் செய்தார். இதில், லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தின் உத்தரவு உறுதி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விஜயகுமார், உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணை நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விஜயகுமார், நேற்று மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி வடிவேலு முன் சரணடைந்தார். இதைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற உதவிப் பொறியாளர் விஜயகுமாரை மதுரை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Tags : Saran ,
× RELATED ஜார்க்கண்டில் 12 மாவோயிஸ்ட்கள் சரண்