கொடைக்கானல், ஜன. 28: கொடைக்கானல் ஆய்வகத்தில் நாசா செல்லும் மாணவிக்கு ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி லட்சுமி பிரியா நாசா விண்வெளி மையம் செல்வதற்கு முடியாமல் பொருளாதார பிரச்னைகள் உள்ளதாகவும், யாரேனும் உதவி செய்தால் நாசாவிற்கு செல்ல முடியும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதையறிந்த கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்திருந்த கோவையை சேர்ந்த நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானி கோபால்சாமி மாணவி லட்சுமி பிரியாவை அழைத்து பேசினார். தொடர்ந்து அவரது நிலை குறித்து கேட்டறிந்து உதவி செய்வதாக உறுதியளித்தார்.
இந்நிலையில் லட்சுமி பிரியா மற்றும் அவரது பெற்றோரை கொடைக்கானல் வான் இயற்பியல் ஆய்வகத்திற்கு வரவழைத்தனர். அங்கு விஞ்ஞானி எபினேசர் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி அளித்து மாணவியின் கனவு நினைவாக வாழ்த்தினார். இதனால் மாணவியும், அவரது பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர்.