ஜெயங்கொண்டம், ஜன. 28: ஜெயங்கொண்டம் அருகே திருமணம் முடிந்தவுடன் புதுமண தம்பதியினர் அரசு பள்ளிக்கு சென்று மாணவர்களுக்கு துணிப்பை, மரக்கன்றுகளை வழங்கினர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தை சேர்ந்த தமிழரசன்- அறிவுசெல்வி. இவர்களுக்கு நேற்று திருமணம் நடந்தது. இதையடுத்து திருமண கோலத்தில் வருங்கால சந்ததியை காக்க வேண்டும், இயற்கை வளங்களை காக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிக்கு வந்த பொதுமக்களுக்கு துணிப்பைகள் வழங்கினர். மேலும் நாச்சியார்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மணமக்கள் கோலத்தில் தமிழரசன் மற்றும் அறிவுச்செல்வி சென்று துணிப்பைகள், மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர். மரங்களின் நண்பர்கள் அமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் கள பணியாளர்கள் செல்வகுமார், அய்யாக்கண்ணு, பிரபாகரன் பங்கேற்றனர்.