தாம்பரம்: தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு தாம்பரம், குலசேகரன் தெருவில், பொதுமக்கள் அனைவரும் குப்பை கழிவுகளை சாலையிலும், அருகில் உள்ள காலி இடங்களிலும் கொட்டிவிட்டு செல்வதால், அதிகப்படியான குப்பை குவிந்து சாலை முழுவதும் பரவி கிடந்தது.
இதனை நகராட்சி ஊழியர்கள் அகற்றாமல் இருந்ததால் கடுமையான துர்நாற்றம் வீசியதுடன் கொசுத்தொல்லை அதிகமாக இருந்தது. இதுகுறித்த செய்தி ‘தினகரன்’ நாளிதழில் நேற்று படத்துடன் வெளியானது.
இதையடுத்து, நேற்று காலை நகராட்சி சுகாதார அலுவலர் மொய்தீன் தலைமையில் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று குப்பை கழிவுகளை முழுமையாக அகற்றினர். பின்னர், அப்பகுதியில் பொதுமக்கள் மீண்டும் குப்பை கழிவுகளை கொட்டக்கூடாது என்பதற்காக அந்த இடத்தில் வரிசையாக கோலமிட்டு குப்பை கழிவுகளை இங்கு கொட்டக்கூடாது என கோலமாவில் எழுதி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.