மார்த்தாண்டம், ஜன.28: குழித்துறை நகராட்சியில் சேகரிக்கப்படும் மட்கும் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க ₹48 லட்சத்தில் மார்க்கெட் சாலையில் நுண்ணுரம் செயலாக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக சேரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் அனைத்தும் அதற்கான இயந்திரத்தில் அரவை செய்யப்படுகின்றன. பின்னர் தொட்டியில் காய வைத்து உரமாக விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உரம் ஒரு கிலோ 1க்கு விற்பனை ஆகிறது. இயற்கையான உரம் என்பதால், விவசாயிகள் மத்தியில் வரவேற்பும் உள்ளது.
நுண்ணுரம் செயலாக்க மையத்தில் கழிவுகள் அரவை இயந்திரத்தில் அரைக்கப்பட்ட பின், தொட்டிகளில் காய வைக்கப்படுகின்றன. அப்போது அதில் ஏராளமான புழுக்கள் உருவாகின்றன. இந்த புழுக்களை உட்கொள்வதற்காக கோழிகளும் வளர்க்கப்படுகின்றன. இந்த நிலையில் முதற்கட்டமாக 4 டன் நுண்ணுரம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல் விற்பனையை கமிஷனர் மூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பொறியாளர் பேரின்பம், சுகாதார அலுவலர் ராமச்சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீஜேஷ்குமார் உட்பட நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.