×

சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண நிகழ்ச்சியில் 40 சவரன், 1 லட்சம் கொள்ளை

பூந்தமல்லி, ஜன. 28: பூந்தமல்லியில் சப்-இன்ஸ்பெக்டர் மகள் திருமண நிகழ்ச்சியில் 40 சவரன் நகை, ஒரு லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  சென்னை அண்ணாநகர் அருகே உள்ள பாடிபுதுநகர் 18வது தெருவை சேர்ந்தவர் தங்கச்சாமி (57).  கிண்டியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரதிபா பிரியதர்சினிக்கும், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த ஜெயகுமார் என்பவருக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதற்கான திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு பூந்தமல்லி, குமணன்சாவடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. இந்த விழாவிற்கு உறவினர்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
பின்னர் இரவு மணப்பெண், தனது அறைக்கு சென்றபோது மணப்பெண் அறையில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த  தங்க நகை மற்றும்  பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

இதனால் மண்டபத்தில் இருந்த பெண் வீட்டாரும், மாப்பிள்ளை வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு மேற்கொண்டபோது அதில் இரண்டு மர்ம நபர்கள் மணப்பெண் அறையில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வழக்கு பதிவு செய்த பூந்தமல்லி  காவல்துறையினர் 40 சவரன், ஒரு லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களை பற்றி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : robbery ,wedding ceremony ,Sub-Inspector's ,
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...