பள்ளிப்பட்டு, ஜன. 28: திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனூரில் செல்வ விநாயகர் கோயில் தெருவில் அமைந்துள்ள புராதன சப்த கன்னியர் மற்றும் சிவன் திருக்கோயில் புனரமைக்கப்பட்டு சனிக்கிழமை முதல் மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழவையொட்டி திருக்கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு ஹோமகுண்ட பூஜைகள் நடைபெற்று வந்தது. விழாவில் மூன்றாம் நாளான நேற்று காலை மஹா பூர்ணாஹுதியை தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்பட்டு சிவன் கோபுர கலசத்திற்கு புனித நீரால் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து புதியதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சப்த கன்னியர் சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, பெண்களுக்கு குங்குமம், பிரசாதம், பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பெண்கள் கோயில் அருகில் பொங்கல் வைத்து சப்த கன்னியருக்கு படையலிட்டு வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விராசாமி முதலியார் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.