×

துப்புரவு பணிகள் சுணக்கம் கிழக்கு தாம்பரம் பகுதியில் குப்பை குவியல்: தொற்று நோய் பரவும் அபாயம்

தாம்பரம்: தாம்பரம் நகராட்சியில் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறாததால் ஆங்காங்கே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும்  அபாயம் உள்ளது.
தாம்பரம் நகராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். சமீப காலமாக, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் சரிவர குப்பையை அகற்றுவதில்லை. இதனால், முக்கிய சாலைகள், தெருக்கள்,  குடியிருப்பு பகுதிகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக, கிழக்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் சரிவர குப்பை கழிவுகளை அகற்றுவது இல்லை. மேலும் பொதுமக்கள் குப்பை கொட்டுவதற்கு போதிய தொட்டிகள் இல்லாததால் சாலையிலும், அருகில்  உள்ள காலி இடங்களிலும் கொட்டிவிட்டு செல்கின்றனர்.கிழக்கு தாம்பரம், குலசேகரன் தெருவில் உள்ள காலி இடங்களில் அதிகப்படியான குப்பை குவிந்து சாலை முழுவதும் பரவி உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு மர்ம காய்ச்சல் பரவி  வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட குலசேகரன் தெருவில் குப்பை கழிவுகளை நகராட்சி ஊழியர்கள் சரிவர அகற்றுவது இல்லை. இதனால் தெரு முழுவதும் குப்பை கழிவுகள் சூழ்ந்து உள்ளதால்  பொதுமக்களுக்கு இடையூறாக ஏற்படுகிறது. நகராட்சியில் துப்புரவு பணிக்காக மாதம்தோறும் பல லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், முறைப்படி துப்புரவு பணி நடைபெறுவதில்லை. இதற்காக ஒதுக்கப்படும் நிதி எங்கு போகிறது என்பது தெரியவில்லை.   எனவே இதுகுறித்து  சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை தினமும் அகற்ற வேண்டும்’’  என்றனர்.

Tags : area ,East Tambaram ,
× RELATED வாட்டி வதைக்கும்...