×

கூரியர் லாரி பழுது மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல்

திருப்பூர், ஜன.24: திருப்பூர் மேம்பாலத்தின் வழியாக சென்ற கூரியர் லாரி பழுதாகி நின்றதால் நேற்று மேம்பால பகுதியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. திருப்பூர், பழைய பேருந்து நிலையம் அருகில் அதிகப்படியான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் அமைக்கப்பட்டது. அந்த மேம்பாலத்தின் வழியாக பல்லடம் ரோட்டில் செல்லும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சென்று வருகிறது. இந்நிலையில் நேற்று அந்த மேம்பாலத்தின் வழியாக கூரியர் லாரி ஒன்று பல்லடம் நோக்கி கூரியர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த லாரி மேம்பாலத்தின் மையப்பகுதியில் வரும்போது பழுதாகி நின்றது. இதனால் பின்னர் வரக்கூடிய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஒவ்வொன்றாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது. பின்னர் இது குறித்து வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர். மேலும் பாலத்தின் துவங்க முனையில் தடுப்பு அமைத்து கனரக வாகனங்களை பாலத்தின் வழியாக அனுப்பாமல் மேம்பாலத்தின் கீழே செல்லக்கூடிய இணைப்பு சாலை வழியாக அனுப்பி வைத்தனர்.

Tags : Courier Truck Repair Bridge ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா