ஊட்டி, ஜன. 24:நாளை மறுநாள் நடக்கும் குடியரசு தின விழாவில், பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, குடியரசு தின விழாவையொட்டி நாளை மறுநாள் (26ம் தேதி) காலை 10 மணிக்கு ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்று, காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்கிறார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளை கவரவித்தல், பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், மாணவ, மாணவிகள் மற்றும் பழங்குடியினர் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகளில் திரளாக வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு நிர்மலா தெரிவித்துள்ளார்.