நாகை, ஜன.24: வேளாங்கண்ணி தனியார் விடுதியில் தங்கியிருந்த திருவாரூரைச் சேர்ந்த வாலிபர் மர்மமான முறையில் இறந்தார். வேளாங்கண்ணியில் தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி காத்தன்குடி மணலியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் ஆனந்த்(35) கடந்த 21ம் தேதி தங்கினார். நேற்றுமுன்தினம் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்து விடுதி நிர்வாகம் சார்பில் வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் தேவிபாலன் தலைமையில் போலீசார் அறையின் கதவை உடைத்து சென்றனர். அப்போது ஆனந்த் வாய் பகுதியில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.