ஊத்துக்கோட்டை, ஜன. 24: எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராமத்தில் பழுதடைந்த ஓடு போட்ட பழைய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் விஷப்பூச்சிகள் உலாவுவதால், அதை உடனடியாக அகற்ற மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் தாராட்சி கிராமத்தில் 1961ம் ஆண்டு மனமகிழ் மன்றம் தொடங்கப்பட்டது. பின்னர், காலப்போக்கில் இது ஊராட்சி மன்ற அலுவலமாக செயல்பட்டது. இந்த தாராட்சி ஊராட்சியில், தாராட்சி மற்றும் பழைய, புதிய காலனி, எம்ஜிஆர் நகர், தொம்பரம்பேடு, பால் ரெட்டி கண்டிகை, ஆலங்காடு ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் குடிநீர் வரி, வீட்டு வரி, தொழில் வரி, சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் கட்டுவதற்கு ஊராட்சி அலுவலகம் சென்று தான் கட்ட வேண்டும். ஆனால், இந்த ஊராட்சி அலுவலக கட்டிடம் ஓடு போட்ட கட்டிடம் என்பதால், சேதம் அடைந்து மழை காலங்களில் மழை நீர் கசிந்து அலுவலகத்தின் உள்ளே உள்ள முக்கிய கோப்புகள் நனைந்தது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டது. இதனால், இதை யாருமே பயன்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த 24 வருடங்களுக்கு முன்பு 1996ம் ஆண்டு புதிய ஊராட்சி அலுவலக கட்டிடம் இதன் அருகிலேயே கட்டப்பட்டது.
தற்போது இந்த கட்டிடத்தில் தான் ஊராட்சி அலுவலகம் இயங்கிவருகிறது . மேலும், ஊராட்சி அலுவலகம் முன்பு பழைய ஓடு போட்ட ஊராட்சி கட்டிடம் பழுதடைந்து கிடப்பதால் அதில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் உலவுகிறது. இதனால், ஊராட்சி அலுவலகத்திற்கு செல்லும் மக்கள் அச்சத்துடன் செல்கிறார்கள். எனவே, பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தாராட்சி கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாட்களில் கிராம சபை கூட்டங்கள் மற்றும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் ஆகியவை நடைபெறும். இந்த கூட்டங்களுக்கு நாங்கள் அச்சத்துடன்தான் வந்து செல்கிறோம். ஏனென்றால் அருகில் உள்ள பழைய கட்டிடத்தில் விஷப்பூச்சிகள் உலாவுகிறது. எனவே, பழைய ஓடு போட்ட ஊராட்சி கட்டிடத்தை அகற்ற வேண்டும். அதற்கு புதிதாக பொறுப்பேற்ற ஊராட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.