நித்திரவிளை, ஜன.24: நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ மீது பைக்கால் மோதி கொலை மிரட்டல் விடுத்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ், ஏட்டுகள் 3 பேர் உள்ளிட்டோர் நேற்றுமுன்தினம் மாலை 6.15 மணி அளவில் நித்திரவிளை அருகே உள்ள பாலாமடம் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சின்னத்துறையில் இருந்து நித்திரவிளை நோக்கி வந்துகொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்துமாறு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் சைகை காட்டினார். உடனே வாகனத்தை நிறுத்திய மார்த்தாண்டம்துறையை சேர்ந்த பொனிப்பாஸ் மகன் அனிஷ் (33), சிறப்பு எஸ்ஐயின் கால் மீது பைக்கை ஏற்றியுள்ளார்.
இதில் சிறப்பு எஸ்ஐக்கு காயம் ஏற்பட்டது. உடனே அவர் வலியால் துடித்தார். அப்போது பைக்கில் பின்னால் இருந்த அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்து தாஸ் மகன் செல்வராஜ்(31), சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனின் சட்டையை பிடித்து இழுத்ததாக தெரிகிறது.பின்னர் கெட்ட வார்த்தைகள் பேசி எதற்காக வண்டியை நிறுத்தினீர்கள் என்று கேட்டு அரசு பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார். அனிஷ் பைக் சாவியை எடுத்து காட்டி கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் மணிகண்டன் நித்திரவிளை காவல்நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ், 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்தார். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜ் அனிஷ், செல்வராஜ் ஆகிய 2 பேரையும் அதிரடியாக கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.