திருப்பூர், ஜன.23: திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அப்போது போலீசார், தீயணைப்பு படை வீரர்கள், தேசிய மாணவர் படைகளின் அணிவகுப்பு, பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளின் பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு குடியரசு தினவிழா வருகிற 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு நாட்டிய, நடன நிகழ்ச்சிகள் நடத்த உள்ள மாணவ-மாணவிகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளை சேர்ந்த 500்ககும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் பயிற்சி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.