×

பழநி தைப்பூச திருவிழாவிற்கு 20 பைக் ரோந்து போலீசார்

பழநி, ஜன. 23: பழநி தைப்பூச திருவிழாவில் பக்தர்கள் பாதுகாப்பு கருதி 20 பைக் ரோந்து போலீசார் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா வரும் பிப்.2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட நிகழ்ச்சி பிப்.8ம் தேதி நடக்க உள்ளது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பழநி நகரை நோக்கி பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பக்தர்களின் நலன் கருதி ஏரளாமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, பாதுகாப்பு பணிக்காக டி.ஐ.ஜி தலைமையில் 2 எஸ்.பி.க்கள், 15 டி.எஸ்.பி.க்கள் உள்ளிட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 30 மாவட்டங்களில் இருந்தும் குற்றப்பிரிவு போலீசார் குற்றவாளிகள் பட்டியலுடன் வரவழைக்கப்பட உள்ளனர். குழந்தை காணாமல் போனால் அறிவிப்பது, பக்தர்களின் சந்தேகத்தை தீர்க்க 26 இடங்களில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட உள்ளன. இங்கு 24 மணிநேரமும் 2 போலீசார் பணியில் இருப்பர்.

பாதயாத்திரை வழித்தடங்களில் 3 கிலோமீட்டருக்கு ஒரு பைக் என்ற விகிதத்தில் ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட உள்ளது. பக்தர்கள் கூட்டத்தில் 4 சக்கர வாகனங்களில் ரோந்து செல்ல முடியாது என்பதால் பைக் மூலம் ரோந்துப்பணி மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கிரிவீதி மற்றும் மலைக்கோயில் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இடும்பன் குளம் மற்றும் சண்முகநதியில் தீயணைப்பு படையினருடன் காவல்துறையில் உள்ள நீச்சல் வீரர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவ்வாறு கூறினர்.

Tags : festival ,
× RELATED நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்… புகைப்படத் தொகுப்பு!